Archives: ஜூலை 2019

சிறையிருப்பிலும் உண்மை

1948ம் வருடம், ஒருநாள் காலை வேளையில் வீட்டின் அழைப்புமணி ஒலிக்கவே, கதவைத் திறந்த ஹரலன் பாபோவ் என்பவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் வாழ்க்கை ஓட்டம் மாறப்போவதை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை. ஏனென்றால் அங்கு வந்திருந்தது பல்கேரிய காவலர்கள். ஹரலனுடைய விசுவாசத்தின் நிமித்தம் அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தார்கள். அதன்பிறகு பதின்மூன்று வருடங்கள் சிறையில் கழித்தார், தனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தரும்படி தேவனிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தார். சிறையில் கொடுமை அனுபவித்தார். ஆனாலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற நிச்சயம் இருந்தது. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை சகக்கைதிகளிடம் பகிர்ந்துகொண்டார். அநேகர் விசுவாசித்தார்கள்.

இதே கதைதான் யோசேப்புக்கும். கோபங்கொண்ட தன் சகோதரர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி தன்னை எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்றபோது, தன் வாழ்க்கை ஓட்டம் எப்படி இருக்குமென அவருக்கும் தெரியவில்லை. அந்த வியாபாரிகள் யோசேப்பை போத்திபார் என்கிற ஓர் எகிப்திய அதிகாரியிடம் விற்றார்கள். பலதெய்வ நம்பிக்கையுடைய மக்கள்  வாழ்ந்துவந்த ஒரு கலாச்சாரத்தில் வாழவேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு, போத்திபாரின் மனைவி யோசேப்பை மயக்கப்  பார்க்கிறாள். எவ்வளவோ முயன்றும் யோசேப்பு இடம் கொடுக்கவே இல்லை. உடனே பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்துகிறாள். அதனால் சிறையில் அடைக்கப்படுகிறார் யோசேப்பு. ஆதியாகமம் 39:16-20. ஆனாலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. யோசேப்போடே தேவன் இருந்தார். அதுமட்டுமல்ல, “அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணி(னார்).” மேலும், அதிகாரிகளின் “தயவு கிடைக்கும்படி செய்தார்” (39:3,21).

யோசேப்பு எவ்வளவு பயத்தில் இருந்திருப்பார் என்று சொல்லவேண்டியதில்லை!  ஆனாலும் உண்மையோடிருந்தார், ஒழுக்கம் தவறவில்லை. அந்த இக்கட்டான பயணத்தில் யோசேப்போடே தேவன் இருந்தார், யோசேப்புக்கு ஒரு மகத்தான திட்டத்தையும் வைத்திருந்தார். உங்களைக் குறித்தும் அவருக்கு ஒரு திட்டம் உண்டு. தைரியமாக இருங்கள், விசுவாசத்தோடு நடந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், எல்லாம் அவருக்குத் தெரியும் என்று நம்புங்கள்.

காலந்தாழ்த்துவதே இல்லை

என்னுடைய மாமியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அனைவருமே மிகுந்த பதட்டத்திற்குள்ளானோம். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கமுடிந்தது. பிறகு மருத்துவரிடம் பேசியபோது, மாரடைப்பு வந்ததும் 15 நிமிடங்களுக்குள் சிகிச்சை எடுத்தால் அபாயக்கட்டம் நீங்கி 33 சதவீதம்பேர் பிழைப்பதாகச் சொன்னார். 15 நிமிடங்களுக்கு பிறகு சிகிச்சை எடுப்பவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பிழைக்கிறார்களாம்.

யவீருவின் மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள் (உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது), அவளைக் குணமாக்குவதற்காகச் சென்றுகொண்டிருந்த இயேசு, யாருமே யோசித்திராத வகையில் இடையில் நின்றுவிட்டார் (மாற். 5:30). தம்மைத் தொட்டது யார் என்பதை அறியும்படி நின்றார், தம்மைத் தொட்ட பெண்ணிடம் அன்புடன் பேசினார். யவீரு என்ன யோசித்திருப்பார்? ‘என் மகள் மரிக்கப்போகிறாள், இந்த நேரத்தில் இப்படி காலதாமதமாகிறதே?’ இயேசு அங்கு வெகுநேரம் நின்றுவிட்டார் போலும், யவீரு பயந்ததுபோலவே நடந்தது; அவனுடைய மகள் மரித்துப்போனாள். வசனம் 35.

ஆனால் இயேசு யவீருவிடம் திரும்பி, அவனுக்கு ஆறுதலான ஒரு வார்த்தையைக் கூறுகிறார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (வச. 36). பிறகு யவீருவின் வீட்டிற்குச் சென்றதும் தன்னைப் பரிகாசமாகப் பார்த்த யாரையுமே பொருட்படுத்தாமல், யவீருவின் மகளைப் பார்த்து, அவளை எழுந்திருக்கச் சொல்லி, மீண்டும் உயிரோடு கொண்டுவந்தார்! ஒருபோதும் தாம் காலதாமதம் பண்ணுவதில்லை என்பதை அங்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வல்லமைக்கும், அவர் செய்யத் தீர்மானித்திருப்பதற்கும் காலம் தடைபோடவே முடியாது.

நான் நம்பியிருந்தபடி செய்யாமல் தேவன் காலந்தாழ்த்திவிட்டாரே என்று எத்தனை நேரம் யவீருவைப் போல நாமும் நினைத்திருப்போம். ஆனால் அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய நன்மையான, இரக்கமான கிரியைகளை நிறைவேற்ற அவர் காலந்தாழ்த்தவே மாட்டார்.

வாழ்க்கைமூலம் கற்றுக்கொடுங்கள்

ஆடு-புலி ஆட்டம்போல பலகைகளை வைத்து விளையாடுகிற விளையாட்டுகள் ஏராளம் உள்ளன. அப்படியொரு விளையாட்டு பலகை ஒன்று கிடைத்ததும் என் ஆறு வயது மகன் ஓவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால் அரைமணிநேரம் விளையாட்டு விதிகளை வாசித்தபிறகு, அவனுக்கு சலிப்புத்தட்டிவிட்டது. எவ்வாறு அந்தப் பலகையை வைத்து விளையாடுவது என்று அவனுக்குப் புரியவில்லை. அந்தச் சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு அதில் விளையாடி அனுபவமுண்டு.  அவர் விளையாடிக் காண்பித்த பிறகுதான், தனக்கு பரிசாகக் கிடைத்த அந்தப் பலகை அவனுக்கு முக்கியமானதாகத் தெரிந்தது.

அவர்கள் இருவரும் விளையாடியதைப் பார்த்தபோது, அனுபவமுள்ள ஆசிரியர் ஒருவர் இருந்தால் புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பது புரிந்தது.  விதிமுறைகளை வாசித்தும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் செயல்முறையோடு யாராவது விளக்கிச் சொன்னால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதை நன்றாகப் புரிந்திருந்தார். சபையானது விசுவாசத்தில் வளருவதற்கு தீத்து எவ்வாறு உதவியாக இருக்கமுடியும் என்று எழுதும்போது, அனுபவமிக்க விசுவாசிகளின் பங்கு அதில் மிகவும்  முக்கியமானதென பவுல் வலியுறுத்துகிறார். ‘ஆரோக்கியமான உபதேசம்” முக்கியம்தான்; ஆனால் வெறுமனே அதைப் போதிப்பது மட்டும் போதாது, அதன்படி வாழ்ந்துகாட்டவேண்டியதும் முக்கியம். முதிர்வயதுள்ள ஆண்களும் பெண்களும் தன்னடக்கமுள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமென பவுல் எழுதுகிறார் (தீத்து 2:2-5). “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி” என்று சொன்னார். வசனம் 7.

ஆரோக்கியமான உபதேசத்திற்காக நன்றிசொல்லுகிறேன், ஆனால் அவற்றின்படி வாழ்ந்து போதிக்கிறவர்களுக்காகவும் நன்றிசொல்லுகிறேன். கிறிஸ்துவின் சீடன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று அவர்கள் தங்களுடைய வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்; நானும் அந்தப் பாதையில் எவ்வாறு நடக்கலாமென எளிதில் கண்டுகொள்ளவும் உதவியிருக்கிறார்கள்.

யார் இவர்?

நானும் என் கணவரும் தேனிலவை முடித்துவிட்டு எங்களுடைய ஊருக்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் லக்கேஜ்களை ஏற்றும் பகுதியில் காத்திருந்தோம். என் கணவரை முழங்கையால் இலேசாக இடித்து, பக்கத்தில் நின்றிருந்த ஒருவரைக் காட்டினேன்.

என் கணவரும் ஓரக்கண்ணால், “யார் அவர்” என்று சைகையால் கேட்டார்.

அவர் ஒரு நடிகர், அவர் பிரபலமாகப் பேசப்படும் கதாபாத்திரங்கள் பற்றிச் சொன்னேன். பிறகு நாங்கள் இருவரும் அவரிடம் சென்று, எங்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இருபத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டாலும், ஒரு திரைப்பட நடிகரைச் சந்தித்த அனுபவம் இன்றும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிரபல நடிகர் ஒருவரைச் சந்திப்பது ஒரு புறத்தில் இருக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான ஒருவரை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். “யார் இந்த மகிமையின் ராஜா?” (சங். 24:8).  சர்வவல்ல தேவனாகிய அவரை சிருஷ்டிகர், போஷித்துக் காப்பாற்றுகிறவர், சர்வத்தை ஆளுகிறவர் என்று சங்கீதக்காரன் சுட்டிக்காட்டுகிறார்.  “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.  அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்” என்று புகழ்ந்து பாடுகிறார் (வச. 1-2).  முற்றிலும் பிரமித்தவராக, தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும், ஆனாலும் அவரிடம் நாம் செல்லமுடியும் என்றும் தாவீது கூறுகிறார் (வச. 3-4).  அவருக்காக நாம் வாழும்போது, அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாம், அவருடைய வல்லமையைப் பெறலாம், அவர் நமக்காக யுத்தம்செய்வார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம் (வச. 8).

தேவனைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு அவரே வாய்ப்புகளை உண்டாக்குகிறார்; அவர் மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு பிரபலமானவராக இருக்கிறார். அவரைப் பற்றி உணர்ந்துகொள்ளாதவர்கள்கூட, நம்மில் அவருடைய குணம்பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது, “அவர் யார்” என்று கேட்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உண்டாகும்.  தாவீதைப் போல நாமும் பிரமிப்புக்குள்ளாகி தேவனைச் சுட்டிக்காட்டலாம்; அவரைப் பற்றிச் சொல்லலாம்.